Posts

காவேரி

தேடிவரும்; ஓடிவரும்;  தெம்மாங்கு பாடி வரும்;  ஆடியிலே பெருக்கெடுத்து  காவேரி ஓடிவரும் ! கூடிவரும் சொந்தமெல்லாம்  நாடி வரும் உன் கரைக்கே; கொண்டாடி குளித்திருக்க!  குறையின்றி வாழ்ந்திருக்க! நாயகியே! காவேரி!  நாளெல்லாம் காக்க வேணும் ! நாடெல்லாம் நலமாக; நல்ல விதை தான் முளைக்க; நீரால சீராட்டி நீ யென்றும் காக்க வேணும் ; தாயே எம் காவேரி ; வாழ வைக்க வேண்டும் அம்மா !

ரித்தின்

ஆத்தோரம் மாமரமே; அள்ளித் தந்த சீதனமே; ஆசையாய் நான் பாக்கும்; அழியாத ஓவியமே, காத்தாடும் மூங்கிலிலே; கரைஞ்சோடும் தேன் குரலே;  காவேரியாத்தினிலே கால் நனைக்கும் வாங்கல் மண்ணே, புரட்டாசி புதுமாசம்; பூவெல்லாம் தேன் வாசம்; பொறந்தானே எம்பேரன் பொங்கிவரும் ஆறாட்டம், காவேரி ஆறுமாச்சு; கரையும் இங்கே ஈரமாச்சு; கால் எடுத்து நீ நடக்க ;கடலு கூட ஓரம்போச்சு, பள்ளிக்கூடம் போகவேணும்;பாடங்களை படிக்கவேணும்;  பாசத்துல நீயுமொரு; பள்ளிக்கூடம் ஆகவேணும், நிறைய நீ படிக்கவேணும்; நெச வாழ்க்கை வாழ வேணும் ; பணம்தேடி ஓடும் அந்த பரிதாபம் குறைக்க வேணும், தாய் சொல்ல தகப்பன் சொல்ல; தட்டாம கேக்க வேணும்;  தன்னுசுரா உன்னுசுரா தங்கச்சிய பாக்க வேணும், வேர்வை நனைச்சுவைச்சா;விதையெல்லாம் மரமாகும்;  விடிகால சூரியனே !ராவெல்லாம் பகலாகும், தாய் தகப்பன் மனசுபோல தழைச்சு நிக்கும் நெல்மணியே;  தாத்தாவின் உசுரத்தான் தாங்கி நிக்கும் கண்மணியே!

குரு ராகவேந்திர

என்ன வேண்டும் எனக்கு? என்று தெரியும் உனக்கு! மனதி லில்லை பிணக்கு; மந்தரா லயமே கணக்கு! வேண்டும் வரம் எனக்கு; தந்த குரு உனக்கு! என்ன செய்வேன் வழக்கு? எம் குருவே விளக்கு ? கண் விழித்தோம் எதற்கு? காட்சி தந்தாய் அதற்கு ! காட்டும் அன்பு எனக்கு;  காவி கொண்டாய் உனக்கு! வாடும் மனம் எனக்கு; வாழ்வு தந்த உனக்கு! என்ன செய்வேன் வழக்கு? எம் குருவே விளக்கு?

விநாயகா

நீரின்றி வேரில்லை வேரின்றி பயிரில்லை நீயின்றி நானில்லை நாயகா  எங்கள் ஊர் கண்ட பொழுதே விநாயகா தாவிடும் மனதினை தன் முகம் காட்டியே சஞ்சலம் தீர்த்திடும் நாயகா தாயவள் செல்லப் பிள்ளை விநாயகா  கூடிடும் நன்மையும் நாடிடும் செல்வமும் நாயகன் உன்னருள் நாயகா  என்றும் வான் கொண்ட வரமே விநாயகா  தேன் கொண்ட கரும்பும் செவ் விளநீரும்  நான் கொண்டு தருவேன் நாயகா வான் கொண்ட மழையாய்  வந்தருள் புரிவாய் விநாயகா  ஊர் கொண்ட கொழுக்கட்டை  உன் முன் நிறைந்திட  நீ கொள்ள வருவாய் நாயகா  சீர் கொண்டு எம் குலம்   வாழ்ந்திட செய்வாய் விநாயகா என்றும் வான்தரும் மழையாய் விநாயகா

குரு ராகவேந்திர

இதய கோயிலில் என்றும் ராமனே!  எங்கள் ராயர் கொண்டார், இமைகள் மூடியே இதயம் பாடியே  தினமும் பூஜை செய்தார், எங்கள் ராயர் கொண்டார்; ராமா!  எமக்கு உன்னை தந்தார்! மூன்று மூர்த்திகள் தந்த பேறுகள், முனிவன் உன்னையே நனைத்த ஆறுகள், மூலராமன் அவன் தந்த ஆசிகள், முடிவில்லாத மழையின் மேகங்கள், எங்கள் ராயர் கொண்டார் அதை  எமக்கு அள்ளித் தந்தார்! காமதேனுவாய் கருணை ஓடைகள், கண்திறந்து நீ தந்த ஞானங்கள், காட்டு வழிதனில் காட்டும் பாதைகள், காக்க வந்தவன் கருணைப் பார்வைகள், எங்கள் ராயர் தந்தார்! அவர்'  எமக்கு வாழத் தந்தார்

குரு ராகவேந்திர

ராம நாமமும் கிருஷ்ண கீதையும் தாங்கி  தந்த குருவே  அரியின் வடிவிலே ஆள வந்தவன் ஆக்கி தந்த வழியே ஆளவந்தாய் குருவே நீ ஆக்கி தந்தாய் வழியே வாழும் வழியதில் வாசலாகி நீ வாழ்வை தந்த குருவே வாட்டம் போக்கவே வாழ்வை காக்கவே   மூல ராமன் கண்ட குருவே  கண்ணன் சொன்னதை காலம் வென்று நீ கரைத்து தந்த குருவே காணும் விழிகளில் காட்டு வழியதில் காத்து நின்ற குருவே அன்பின் நேசத்தை அரியின் வேசத்தில் காத்து நின்ற உருவே காவலாகி என்றும் காக்கும் என்பதை காட்டி தந்த குருவே ராஜனாக நிற்கும் குருவே எங்கள் ராகவேந்திர குருவே

மீனாட்சி சுந்தரேஸ்வரர்

வைகை நதியின் கரையினிலே  வாழ்வின் வளமே அதிசயமே மண்ணின் இதயம் மதுரையிலே மானிடம் காக்கும் எம் மீசா மங்கை மதுரை மீனாட்சி  மதுரை நகரின் மனசாட்சி  பொங்கும் வைகை யின் புனலாட்சி புதிதாய் கொண்டாள் உன் மாட்சி  கைத்தலம் கொண்டாய் மதுரையிலே காத்திடும் கண்கள் காவலிலே பொங்கும் புன்னகை உதட்டினிலே பொற்றாமரைக் கரையின் குளத்தினிலே எத்தனை அழகாய் பொன்மேனி எங்கள் உயிராய் திருமேனி சுந்தரேசன் உன் மேனி  சுழலும் கங்கை திரிவேணி