Posts

Showing posts from August, 2023

குரு ராகவேந்திர

என்ன வேண்டும் எனக்கு? என்று தெரியும் உனக்கு! மனதி லில்லை பிணக்கு; மந்தரா லயமே கணக்கு! வேண்டும் வரம் எனக்கு; தந்த குரு உனக்கு! என்ன செய்வேன் வழக்கு? எம் குருவே விளக்கு ? கண் விழித்தோம் எதற்கு? காட்சி தந்தாய் அதற்கு ! காட்டும் அன்பு எனக்கு;  காவி கொண்டாய் உனக்கு! வாடும் மனம் எனக்கு; வாழ்வு தந்த உனக்கு! என்ன செய்வேன் வழக்கு? எம் குருவே விளக்கு?

விநாயகா

நீரின்றி வேரில்லை வேரின்றி பயிரில்லை நீயின்றி நானில்லை நாயகா  எங்கள் ஊர் கண்ட பொழுதே விநாயகா தாவிடும் மனதினை தன் முகம் காட்டியே சஞ்சலம் தீர்த்திடும் நாயகா தாயவள் செல்லப் பிள்ளை விநாயகா  கூடிடும் நன்மையும் நாடிடும் செல்வமும் நாயகன் உன்னருள் நாயகா  என்றும் வான் கொண்ட வரமே விநாயகா  தேன் கொண்ட கரும்பும் செவ் விளநீரும்  நான் கொண்டு தருவேன் நாயகா வான் கொண்ட மழையாய்  வந்தருள் புரிவாய் விநாயகா  ஊர் கொண்ட கொழுக்கட்டை  உன் முன் நிறைந்திட  நீ கொள்ள வருவாய் நாயகா  சீர் கொண்டு எம் குலம்   வாழ்ந்திட செய்வாய் விநாயகா என்றும் வான்தரும் மழையாய் விநாயகா

குரு ராகவேந்திர

இதய கோயிலில் என்றும் ராமனே!  எங்கள் ராயர் கொண்டார், இமைகள் மூடியே இதயம் பாடியே  தினமும் பூஜை செய்தார், எங்கள் ராயர் கொண்டார்; ராமா!  எமக்கு உன்னை தந்தார்! மூன்று மூர்த்திகள் தந்த பேறுகள், முனிவன் உன்னையே நனைத்த ஆறுகள், மூலராமன் அவன் தந்த ஆசிகள், முடிவில்லாத மழையின் மேகங்கள், எங்கள் ராயர் கொண்டார் அதை  எமக்கு அள்ளித் தந்தார்! காமதேனுவாய் கருணை ஓடைகள், கண்திறந்து நீ தந்த ஞானங்கள், காட்டு வழிதனில் காட்டும் பாதைகள், காக்க வந்தவன் கருணைப் பார்வைகள், எங்கள் ராயர் தந்தார்! அவர்'  எமக்கு வாழத் தந்தார்

குரு ராகவேந்திர

ராம நாமமும் கிருஷ்ண கீதையும் தாங்கி  தந்த குருவே  அரியின் வடிவிலே ஆள வந்தவன் ஆக்கி தந்த வழியே ஆளவந்தாய் குருவே நீ ஆக்கி தந்தாய் வழியே வாழும் வழியதில் வாசலாகி நீ வாழ்வை தந்த குருவே வாட்டம் போக்கவே வாழ்வை காக்கவே   மூல ராமன் கண்ட குருவே  கண்ணன் சொன்னதை காலம் வென்று நீ கரைத்து தந்த குருவே காணும் விழிகளில் காட்டு வழியதில் காத்து நின்ற குருவே அன்பின் நேசத்தை அரியின் வேசத்தில் காத்து நின்ற உருவே காவலாகி என்றும் காக்கும் என்பதை காட்டி தந்த குருவே ராஜனாக நிற்கும் குருவே எங்கள் ராகவேந்திர குருவே

மீனாட்சி சுந்தரேஸ்வரர்

வைகை நதியின் கரையினிலே  வாழ்வின் வளமே அதிசயமே மண்ணின் இதயம் மதுரையிலே மானிடம் காக்கும் எம் மீசா மங்கை மதுரை மீனாட்சி  மதுரை நகரின் மனசாட்சி  பொங்கும் வைகை யின் புனலாட்சி புதிதாய் கொண்டாள் உன் மாட்சி  கைத்தலம் கொண்டாய் மதுரையிலே காத்திடும் கண்கள் காவலிலே பொங்கும் புன்னகை உதட்டினிலே பொற்றாமரைக் கரையின் குளத்தினிலே எத்தனை அழகாய் பொன்மேனி எங்கள் உயிராய் திருமேனி சுந்தரேசன் உன் மேனி  சுழலும் கங்கை திரிவேணி

வேலன் வரவு

ஆறுபடை வீரன் காப்பு;  அதுவே வேண்டிடும் நோன்பு! செந்தில் வேலன் வரவு; செந்நெல் தந்திடும் உணவு! நீல கடலதன் தாலாட்டு;  நெஞ்சில் இனித்திடும் ஓர் பாட்டு! கையில் வேலுடன் விளையாட்டு; காத்திட புறப்படும் உனைப் பார்த்து! கால்கள் கடந்து வந்திடுமே; கண்கள் இமைக்க மறந்திடுமே! கந்தன் கூர்வேல் காத்திடுமே; கனவுகள் நனவில் மலர்ந்திடுமே!

யதுகுல கண்ணனே

யதுகுல திலகனே வருவாய்; எங்கள் இல்லத்தில் அமைதியை தருவாய்! கண்ணா! நீ! இல்லத்தில் அமைதியை தருவாய்! போர்கண்ட நாட்கள் போதும்; உன்  புன்னகை பூமழை வேண்டும்! கண்ணா உன் ! புன்னகை பூமழை வேண்டும் ! பெற்றவள் உற்றவள் பேதமில்லாமல் ; பேய்மகள் நஞ்சுண்டு அச்சமில்லாமல்; கொஞ்சிடும் தாயின் மடியும் கொள்ளாமல் ; கோபியர் மயங்கிட கொஞ்சம் நில்லாமல் ; ஓடிடும் கண்ணனே! வா எங்கள் முன்னே! நாடிடும் வெண்ணெய் நான் கொண்டு தருவேன்; ஊர் கண்டு மகிழ்ந்திட தேர் கொண்டு வருவேன்  வாய் கொண்ட மண்ணில் வையகம் காட்டும் வான் கொண்ட நிறமதின் தேன் தரும் மழையே வா எங்கள் கண்ணனே! வாசலின் முன்னே!

சங்கர நாராயணன்

பார்க்கும் பார்வையில் ஓர் உருவாய் காக்கும் விதத்தில் ஈர் உருவாய் கடலில் நதிபோல் கலந்திருக்கும் கற்பக தருவாய் விரிந்திருக்கும்  வாழ்வின் வழியாய் எம் ஈசன்  வாழ்வை காக்கும் பரந்தாமன்  எம்மிரு கண்களில் ஒளியாக  எங்கள் சங்கர நாராயணன் சங்கும் உடுக்கையும் ஓர் ஒலியாய்  இடபமும் கருடனும் ஓர் உயிராய்  வாழ்வும் வளமும் ஓர் கனவாய்  வலமாய் இடமாய் ஓர் உடலாய்  வந்தான் சங்கரநாராயணன் தந்தான் சங்கர நாராயணன்  சங்கரனே எங்கள் நாராயணன்

என் ராசா மன்னவனே

பொங்கிவரும் காவிரியே; புரட்டாசி பூ மழையே; எங்கவீட்டு சிங்கக்குட்டி; நீ! இறக்கி வைச்ச புன்னகையே! தென்னை யெல்லாம் புதுப்பாள ;தேனூரும் ஒரு வேளை; தேங்காம தினம் ஊறும்' பாச மெல்லாம் உம்மேல! வண்டு வந்து பூவாட்டும்; வாச மெல்லாம் ஊர் கூட்டும்; வாசலிலே போட்ட கோலம்' வரவேற்பு தான் படிக்கும்! வானத்துல வெள்ளி நின்னு வழிகாட்டும் விடியலில;  வந்து நின்ன சின்னவனே! எம் ராசா மன்னவனே! கால் நடக்கும் பின்னால மனசு யெல்லாம் முன்னால  கண்மணியே உன் மனசு ஏறி நிக்கும் வான் போல ஏறி நிக்கும் இமயமலை எங்க வீட்டு சின்னமலை கூடிவரும் கூட்ட மெல்லாம் கொண்டாடும் தங்கமலை

அன்னை காளி

 ஆயிரம் தீபங்கள் கண்களிலே; அற்புத வாளும் கைகளிலே; சூலமும் உடுக்கையும் சேர்ந்திருக்கும்  நெற்றியில் குங்குமம் நிலைத்திருக்கும்  காப்பவள் காளி கண்முன்னே  கவலையேது இனிபின்னே வாழும் வாழ்வதில் குழப்பமில்லை  வந்தாள் காளி பயமுமில்லை எலுமிச்சை மாலை தோள்களிலே என்றும் எங்கள் வினை தீர்க்கும் சிவந்தாள் காளி சீற்றத்துடன் தீமைகள் எல்லாம் ஓடிவிடும் காக்கும் தாயின் பாதத்திலே பணிந்தோம் காப்பாள் தாயவளே

வாழ்க மகனே

வாழ்க நீ எம் மகனே;  வாழ்க! வாழ்க! களைப் பறியா காவிரியே;  கை குலுக்கும் புன்னகையே; உடன் நடந்து உறவாடும்  உற்சாகப் பூ மழையே! கடல் கடந்து சென்றாலும்  கரை மீண்டு வந்தாலும்; மலை கண்ட புகழோடு நிலை கொண்ட அன்போடு; நேரிழையாள் துணையோடு;  நெஞ்சினிக்க மகனோடு' மகளோடு; மண் மயங்கி பாராட்ட! விண் இறங்கி சீராட்ட!  வாழ்வாய்! நீ எம் உயிரே! வாங்கலம்மன் அருளாளே!

அன்னை உமையின் அரசாட்சி

மனதில் ஏதும் கவலையில்லை மறைந்தது உன்னால் மீனாட்சி கலங்கும் கண்களை காணவில்லை  காத்தாய் மதுரை மீனாட்சி பொங்கும் வைகை கரை தனிலே  புதிதாய் பாய்ந்த புது வெள்ளம்  பொன்னாய் விளைந்தது புது நெல்லும்  பூவாய் மலர்ந்தது எம் உள்ளம் எங்கள் மதுரை மீனாட்சி  எம்மை காத்திடும் உன் ஆட்சி அன்னை உமையே அரசாட்சி அவளே எங்கள் உயிர் சாட்சி

கலைகளின் வாணி

 கண்கள் திறந்தாள் கலைகளின் வாணி கவிதைகள் தந்தாள் கருணையின் ராணி இன்னிசை வீணை  இசை தந்த வாணி இனித்திடும் இல்லம்  இவள் எங்கள் வேணி  தாமரை தாங்கிடும்  தளிர் மென் மேனி தவழ்ந்திடும் புன்னகை தான் கொண்ட வாணி கற்றிட ஆயிரம் தந்தவள் வாணி காலையின் கதிராய் காப்பவள் ராணி

வாழ்க நீ சின்னவளே

கண்ணுல குறும்போட;  கையில் கரும்போட;  கற்கண்டு தேனோட; வந்தாளே செல்லமக!  வாசமுல்லை சின்னமக! கைபிடிச்ச கரும்பாட்டம்;  வாழ்வினிக்கும் தேனாட்டம்;  ஊர் மெச்சும் உன்னாட்டம்; எங்களுக்கு கொண்டாட்டம்! கைபிடிக்கும் காவிரியே;  கால் நனைக்கும் கடலையே; வாழவைக்கும் வான்மழையே; வாசலிலே பூ மழையே! வாழ்க எம் சின்னவளே! வான் புகழ என்னவளே! தாய் தகப்பன் மனசாட்டம்! தாங்கி நிக்கும் உசுராட்டம்!

ஏழுமலையான்

 வண்ண மலர் மாலையப்பா வானம் தொடும் தோற்றமப்பா ; கண்கள் கண்ட நேரமப்பா கவலை இனி இல்லையப்பா! பொன் அளக்கும் சீனிவாசா; புவி அளந்த வரதராஜா; மண் அளந்த வாமன ரூபா; விண் அளந்த விஸ்வ ரூபா! கால் நடந்து ஏழுமலை; காண வந்தோம் நீயே துணை! ஊண் மறந்து ஏங்கி நின்றோம்; உடன் இருந்து காப்பாய் என்றும்!

குரு ராகவேந்திர

கேட்கும் வீணையின் நாதத்திலே கேள்விக்கு பதிலை தந்தவரே வாழ்வின் வழியில் ஒளியாக பாதை காட்டி நின்றவரே சூடிய மாலையின் மலர் போலே சுற்றம் கூடி வாழ்ந்திடவே வாடும் மனங்களில் மணமூட்டி  வாழ்ந்திட செய்த குருவருளே தேடும் விழிகளின் முன்வந்து தெய்வமாய் நின்ற திருவருளே நாடி உன்னை மகிழ்வோடு மந்தராலயம் ஓடி வந்தோம் மண்ணில் மருந்தை தந்தவரே மானிடம் காத்திட வேண்டிடுவோம்

குரு ராகவேந்திர

துளசிமாலை அணிந்த குருவின் காட்சி காணக் கிடைத்ததே, தூய வாழ்வின் கதவு திறந்தே உன்னை அழைத்து வந்ததே, மனித வாழ்வின் மகத்துவத்தை மனத்தில் ஏற்றி வைத்ததே, மாயக் கண்ணன் சொன்ன கீதையை மனமுருகி தந்ததே, அனுமன் பீமன் மத்வர் காட்டிய பாதை கடந்து வந்ததே, மந்திரா லயத்தில் மண்ணில் மறைந்து மனிதர் நம்மை காத்ததே, என்றும் எங்கள் குருவின் நாமம் இதயம் நிறைந்து நின்றதே ராகவேந்திரா ராகவேந்திரா  நாமம் வெற்றி கொண்டதே,

குரு ராகவேந்திர

அன்பின் உருவாய் கண்டோம் ; ஆறுதல் கண்டதும் கொண்டோம், ரட்சிக்கும் கரங்கள் காட்டும் ; ராகவேந்திர குருவைக் கண்டோம், அச்சம் தீர்ந்தது கண்டோம்;  அவனிடம் அடிமை கொண்டோம்,  அனுமன் பீமன் வழியின் தோன்றல்;  மத்வரின் சீடரை மனதில் கொண்டோம், பாதம் பணிந்து நின்றோம்; துளசி தீர்த்தம் உண்டோம், நோயின் வலிகள் நொடியில் மறைய; காக்கும் குருவின் கருணை கண்டோம்

குரு ராகவேந்திர

வாழ்க வாழ்க வாழ்க நீயே வாணிதாசரே, அனுமனின் ஆசியை அள்ளி வழங்கும்  குருராயரே, வாணிதாசரே எங்கள் குருராயரே, புதிய ராகம் பூபாளத்தை புவனகிரி தந்தது; புண்ணியபூமி புதல்வனை ஏற்று புனிதம் கண்டது, காவிரிகரை வந்து கடமை சொல்லி ஞானம் தந்தது, தஞ்சை மண்ணில் தரனியை காக்க தலைவனானது, வாணிதாசரே எங்கள் குருராயரே, கால்கள் கடந்த கல்லும் மண்ணும் புனிதமானது கண்ணன் காட்டிய கீதைசொல்லி கண்கள் திறந்தது, உள்ளம் உருகி உண்மை உணர்ந்து உன்னை தொழுதது, உலகம் வாழ நீ உணர்த்திய பாடம் உண்மையானது, வாணிதாசரே எங்கள் குருராயரே

குரு ராகவேந்திர

அன்பாய் அருளுடன் பார்க்கும் கண்கள் என்றும் உனதன்றோ, ஆயிரம் கவலைகள் அற்புத நொடியில் தீர்ப்பவன் நீயன்றோ, என்றும் நீயன்றோ  எம் குருவும் நீயன்றோ, ராகவேந்திர  ராகவேந்திர குருவும் நீயன்றோ, காவிரி தந்த நாயகன் கொண்டது மந்திராலயமன்றோ, துங்கபத்திர கரைதனில் நின்றது காவிரி மைந்தனன்றோ, உறவுகள் தந்தது பாலமமைத்தது துறவியின் கருணையன்றோ, உறங்கா விழிகொண்டு உண்மையை சொன்னது உயர்ந்தவன் உள்ளமன்றோ, எல்லாம் துறந்து எல்லாம் தந்தது  எங்களின் தெய்வமன்றோ, என்றும் நிலைத்து எம்மைக் காப்பவன்   ஏழையின் மைந்தனன்றோ, கரங்கள் கூப்பி கண்ணில் நீர் கொண்டு நிற்கும் மனிதனன்றோ, ரட்சிப்பான் எமை ரட்சிப்பான்   ராகவேந்திர குருவுமன்றோ

ுரு ராகவேந்திர

உயிராய் உருவாய் உயர்வாய் நின்றாய்  எங்கள் குருவே போற்றி, நிலையாய் நினைவாய் நெஞ்சில் நிலைத்தாய்  நீயே குருவே போற்றி, எளிதாய் எல்லாம் எமக்குத் தந்தாய்  எங்கள் குருவே போற்றி, என்ன பாக்கியம் நாங்கள் செய்தோம்   எல்லாம் நீயே போற்றி, கீதையின் பாதையை கீதமாய் தந்த  குருவே உன்னைப் போற்றி, கூடிய கூட்டம் தேடியே வந்திடும்  என்றும் உன்னைப் போற்றி, இராமன் பூஜையை நாளும் செய்திடும்  நல்லவன் புகழே போற்றி, ராக வேந்திர நாமம் சொல்வோம்  நாளும் உன் புகழ் போற்றி, போற்றி போற்றி போற்றி போற்றி ராகவேந்திரா போற்றி, போற்றி போற்றி போற்றி போற்றி குருவே ராயரே போற்றி

ஆடும் கால்களில் அதியமே

ஆடும் கால்களில் அதிசயமே ஆனந்தம் பொங்கும் சிவமயமே கூடும் கைகளின் அபிநயமே தேடும் விழிகளில் சித்திரமே தில்லையில் ஆடும் நடராசன் சிதம்பர ரகசியம் தரும் நேசன் கொல்லையில் பூக்கும் மலர் வாசன் கொண்டவள் சக்தியின் உயிர் நேசன் அருவாய் உருவாய் வாழ்வு நிலை அடிமுடி காட்ட அண்ணா மலை தருவான் பரமன் வாழ்வின் மழை தன்னிக ரில்லா பரதகலை எழுவான் ஈசன் பகலவனாய் என்றும் இருளில் ஒளியவனாய் மறைவான் ஈசன் இருளவனாய் மனிதர் வாழ்வின் சுமையவனாய்

ஈசன் வரும் வேளை

 துள்ளும் உள்ளமாய் உடனிருந்து  தும்பிக்கையான் முகம் தனைத்தந்து  நம்பிக்கை வாழ்வில் தினம் தந்து நந்திகேஷ்வரன் முன் நின்று நான்மறை போற்றும் நாயகனாய்  நான்மாட கூடலில் சேவகனாய்  அன்னை உமையவள் நாயகனாய் ஆடும் கால்களில் தலைமகனாய் மாலை மயங்கும் வேளைதனில்  மகேஸ்வரன் வருவான் பூமிதனில் முன்னை வினைகள் முடிவாக என்னை காப்பாய் உயிராக

வாசமுல்லை பொன் மகளே

கரையோரம் பூத்திருக்கும் கண்கவரும் செண்பகப்பூ! மலையோரம் மலர்ந்திருக்கும் மனசினிக்கும் மல்லிகைப்பூ! எங்கள் வீட்டு மகராசி தினம் இனிக்கும்  புன்னகைப் பூ! வரமாக  வந்து நிக்கும் எங்க வீட்டு சந்திரனே! வானுயர்ந்த பாதையில பாடி வரவேணும் நீயே! வற்றாத பாசத்திலே காத்திருக்கும் எம் உசுரே! வாசமுல்லை மா மலரே! வாழவேணும் பொன்மலரே!

அன்னை தந்த ஆறுமுகம்

அன்பாய் அழகாய் காக்கும் முகம் அன்னை அவள் தந்த ஆறுமுகம்  மண்ணில் வரமாய் வந்த முகம் விண்ணையும் ஆளும் வேலன் முகம்  வேல் ஒன்று கொண்டாய் சிக்கலிலே வெற்றியை கண்டாய் செந்தூரிலே அழகிய பாலனாய் சிக்கலிலே ஆற்றல் வீரனாய் செந்தூரிலே அழகிய மயிலது வாகனமாய் அன்புடன் சேவலை கொடியுனதாய் கொண்டாய் வேலுடன் நீ அழகாய் கொண்டோம் உன்னை எம் உயிராய்  செந்தில் வேலா எம் முருகா செங்கல் வராயா மால் மருகா முருகா முருகா வேல் முருகா வருவாய் தருவாய் மால் மருகா

எங்கள் குமரன் என்றும் அழகன்

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்  எத்தனை அழகாய் எத்தனை மாலைகள் அத்தனை அழகுடன் அத்தனை மணமுடன் பித்தனின் மகனாய் பிறந்தவன் குமரன் எங்கள்  முருகன் என்றும் அழகன் தன்னிகரில்லா தணிகாசலம் அவன் வேலொன்று கொண்ட விரல்களின் அழகன் வேலவன் குமரன் வெற்றியை தருபவன் தங்க மாலையாய் தாங்கிடும் தோழன் தவழ்ந்திடும் புன்னகை தந்திடும் முருகன் எங்கள் வாழ்வில் இனியவன் அழகன் என்றும் காக்கும் இளையவன் முருகன்

கல்யாண சுந்தரன்

படையோடு வருகிறான் பாருங்கள் ! பரமேஸ்வரன் புகழ் பாடுங்கள்! காளை மீதவன் ஊர்கோலம்;  கல்யாண சுந்தர திருக்கோலம் ! பாருங்கள் வந்து பாருங்கள்;  பரமேஸ்வரன் புகழ் பாடுங்கள் ! சூரிய பந்தை உதைத்தவள் அன்னை ; பூமியில் பசுவாய் பிறந்தாள் பின்னை! காளை மீதிலே சென்றான் காளை ; கன்னி பசுவின் கல்யாண மாலை! அண்ணன் மாலன் அருகில் நாரதன் ; ஆயிரம் தேவர் அழைத்து சென்றிட ! அன்னையை மணந்தான் கல்யாண சுந்தரன்; அருள்வான் நமக்கே ஆலால கண்டன்! கண்களில் வாழும் காட்சியின் செல்வன்; காப்பான் நம்மை கல்யாண சுந்தரன் !

காணும் கணபதி

கண்ணை மூடி திறந்தாள் அங்கே  காணும் தெய்வம் கணபதி தானே  காட்சியில் எளிதாய் கருணை முகமாய்  கண்முன் வருவதும் கணபதி தானே மஞ்சள் பிடித்து வைத்தால் போதும்  வந்து நிற்பவன் கணபதி தானே மனிதர் வாழ்வின் தடைகள் நீக்கி  மாநிலம் காப்பவன் கணபதி தானே  அருகம் புல்லின் அற்புத சக்திகள்  அறிந்தவன் தெளிந்தவன் கணபதி தானே  அன்புடன் உடைத்திடும் தேங்காய் போதும்  அற்புதம் செய்பவன் கணபதி தானே  அழகன் குமரன் அண்ணன் எங்கள்  ஆருயிர் தெய்வம் கணபதி தானே  ஐந்து கரங்கள் கொண்ட கோமகன்  கொஞ்சிடும் குழந்தை கணபதி தானே

மங்கை மாரி

மங்கல நாணை சூடி வந்தாள்  மங்கை மாரி காக்க வந்தாள்  கண்ணுக்குள் தீயை தேக்கி வைத்தாள் கண்கள் மூடியே காவல் கொண்டாள் பட்டு வண்ண சிற்றாடை பாசத்தில் பாயும் நீரோடை ஜொலிக்கும் மூக்குத்தி முகஜாடை  சொந்தம் கூடிடும் அவள் மேடை ஏந்திடும் வாளை ஒரு கரமே  என்றும் காத்திடும் அவள் வரமே மண்ணில் மழையாய் இறங்கிடுமே மாரியின் கருணை காத்திடுமே

ராஜ் கணபதி

ராஜன் நீயே மகாராஜன்  ராஜ கணபதி எம்ராஜன் சூடிய மாலையின் மலர் நேசன் சுழலும் உலகின்  உயிர் வாசன் தனியாய் அரசு வேம்புடனே  தந்தம் தும்பிக்கை தன்னுடனே தடைகள் உடைக்கும் நாயகனே தன்னிகரில்லா விநாயகனே அழகாய் அமர்ந்து அருள் செய்யும் யானை முகம் விந்தை பல செய்யும் கனிவுடன் காக்கும் கணபதியே  கவலை இல்லை உன் துணையே

சிவனே சிவனே சிவனே

சீறும் கங்கை தாய் தனையே  சிரசில் தாங்கிய சிவனே சீறும் நாகத்தை நஞ்சுடனே  கண்டத்தில் ஏந்திய விடனே சிவனே சிவனே சிவனே  சிந்தனை வேறில்லை சிவனே ஐந்து விரல்கள் அழகாய் கூட்டி  அருளும் எங்கள் சிவனே அண்ணா மலையில் உண்ணா முலையுடன் எரிந்திடும் தீபச் சுடரே எழுந்திடும் தீயே விரிந்திடும் சுடரே ஒளிர்ந்திடும் பிறையின் வடிவே ஒன்றில் இரண்டாய் இரண்டில் ஒன்றாய் வாழ்ந்திடும் வாழ்வின் வழியே சிவனே சிவனே சிவனே  சிந்தனை வேறில்லை சிவனே

தணிகை வேலா

தங்க முகமாய் தந்தாய் காட்சி  தணிகை வேலா எமக்கு தணியா தாகம் கொண்டே உன்னை  காண வந்தோம் மலைக்கு பூவின் மாலைகள் புண்ணியம் செய்ததே உந்தன் தோளில் சேர புதிய மாலையில் புகலிடம் கொண்டதே  பூ மலர் உன் புகழ் பாட இதயம் பாடியே இமைகள் தேடியே  ஏங்கி நின்றதே தேடியே இமைகள் மூடியே இதயம் திறந்ததே  எந்தன் குமரனை நாடியே கையில் வேலுடன் கண்ணில் அழகுடன் கருணை செய்தாய் நீ முன்னே கண்ட நிறைவுடன் கண்ணில் மகிழ்வுடன் வாழ்ந்திருக்கும் இம் மண்ணே

குரு ராகவேந்திர

கண்டிருப்போம் உன்னை கண்டிருப்போம்  காமதேனு வாய் கண்டிருப்போம்  கொண்டிருப்போம் தினம் கொண்டிருப்போம்  குருவே உன்னருள் கொண்டிருப்போம் மண்ணில் பிறந்த மனிதருக்கு  விண்ணில் இடமுண்டு வெல்வதற்கு ண உன்னில் கரைந்த எங்களுக்கு  விண்ணில் வெல்ல இடமெதற்கு சொல்லும் நாமம் உன் நாமம்  சொல்லின் பொருளாய் திருநாமம் மண்ணில் வாழும் காலத்திலே  மனதில் நிம்மதி தரும் நாமம்  மழை முகில் மகிழும் மார்கழியில்  மண்ணில் மலரும் வெண் பனியில் நிறைவாய் வாழ்ந்திட அருள் வேண்டும்  குருவே உந்தன் துணை வேண்டும் ராகவேந்திரா அருள் வேண்டும்  ராகவேந்திரா துணை வேண்டும்

வந்தாள் மாரி மழைபோலே

சுழலும் பூமியின் சூத்திரமே சூடும் மல்லிகை நறுமணமே  இருளின் வண்ண தாய் வடிவே இரு விழி தந்திடும் ஒளி முகமே காட்டும் கருணையில் கடல் போலே கண் இமை அசைத்தால் ஒருநாளே கண்டது உலகம் தன்னாலே கரைந்திடும் தீமைகள் உன்னாலே வந்தாள் மாரி மழை போலே மகிழ்ந்திடும் மாநிலம் அவளாலே

அம்மா என்று சொல் போதும்

அம்மா என்ற சொல்லொன்று போதும்  ஆயுள் முழுவதும் வேறென்ன வேண்டும் தந்தாய் உயிரைத் தாங்கியே நின்றாய்  தாயே எமக்கு வேறென்ன வேண்டும் தாயாய் உன்னை பெற்றதில் பெருமை தந்தை தாயுடன் வாழ்ந்தது அருமை தடைகள் தாண்டி வளர்த்தாய் எம்மை தன்னலம் மறந்தே வாழ்ந்தாய் உண்மை கள்ளம் இல்லா உள்ளம் தந்தாய் கண்களில் பாசம் காட்டியே நின்றாய் எதற்கு கவலை என்றே சொல்லி என்னதான் நடக்கும் நடக்கட்டும் என்றாய் எங்கள் வாழ்வின் ஒளியே நீயே எம்முடன் என்றும் வாழ்வாய் தாயே

குரு ராகவேந்திர

கேட்கும் வீணையின் நாதத்திலே  கேள்விக்கு பதிலை தந்தவரே வாழ்வின் வழியில் ஒளியாக  பாதை காட்டி நின்றவரே சூடிய மாலையின் மலர் போலே சுற்றம் கூடி வாழ்ந்திடவே வாடும் மனங்களில் மணமூட்டி  வாழ்ந்திட செய்த குருவருளே தேடும் விழிகளின் முன்வந்து தெய்வமாய் நின்ற திருவருளே நாடி உன்னை மகிழ்வோடு மந்தராலயம் தேடி ஓடி வந்தோம் மண்ணில் மருந்தை தந்தவரே மானிடம் காத்திட வேண்டிடுவோம்

அன்னை மரியின் மகனே நீ

 அன்னை மரியின் அன்பு புதல்வரே  அகிலம் காத்திட வந்தீரே ஆவின் குடிலிலே அவதரித்த நீர் அன்பை பாலாய் தந்தீரே எளிய வாழ்வையே ஏற்று கொண்ட நீர் எமக்கெல்லாம் ஆகி நின்றீரே மனிதர் வாழ்வின் மகத்து வத்திலே மனிதநேயமாய் வாழ்ந்தீரே எங்கள் தேவனே எம் வாழ்வின் மேய்ப்பரே எம்மை வீடு சேர்ப்பீரே

குரு ராகவேந்திர

ஓடி வந்து சரணடைந்து உத்தமன்  வேங்கடன் முன் பணிந்து உலகம் வாழ வழி அறிந்து உலக வாழ்க்கை தனை துறந்து  தேடி தேடி எம்மை தேடி  தெளிவு தந்த குருவே நீ தேவை யென்றும் எமக்கே நீ ஆயிரம் வழிகள் இருந்தாலும்  அதையும் கால்கள் தொடர்ந்தாலும்  சீரிய வழியில் எம்மை செலுத்தும்  மாதவன் கருணை மதி முகமே மத்வர் காட்டிய திருமுகமே வாழ்ந்திடும் குருவே வணங்கி நின்றே வந்திடுவோம் உன் வழி சென்றிடுவோம்

ஆரம்பம் ஆரம்பம் கணபதியே

 எதிலும் ஆரம்பம் கணபதியே எங்கள் வாழ்வின் அதிபதியே தடைகள் இல்லா காரியத்தை தந்திடும் தலை மகன் கணபதியே பிறப்பின் ஆரம்பம் அன்னையிடம் பிறவியின் ஆரம்பம் உன்னிடமே ஓம் என்னும் ஒலியின் ஆரம்பம் உன் புகழ் பாடும் ஆனந்தம் நம்பிக்கை என்பது வாழ்வினிலே தும்பிக்கை யான் உன் பார்வையிலே என்றும் எங்கள் கணபதியே எமக்கு துணையாய் கணபதியே முதலின் முதலாய் கணபதியே முன்னவன் என்றும் கணபதியே

ஆடிய பாதமே போற்றி

ஆடும் கால்களில் அதிசயம் காட்டியே அற்புதம் செய்யும் ஆதி சிவனே போற்றி தேடும் விழிகளில் கோடி விந்தைகள்  கோலம் காட்டியே  ஆடி நின்ற சிவனே போற்றி  நேயன் சேந்தனின் ஆதிரை களியை ஆசையுடன் உண்ட பேயன் சிவனே போற்றி  ஆதி சேஷன் அவன் ஆடல் காணவே  ஓடி வந்தான் உன்னை போற்றி  நாடி வந்தவன் பதஞ்சலி ஆகி நின்றே  பரதம் பயின்றான் போற்றி கூடும் மனிதர் தம் வாழ்வின் துயரங்கள் ஓடி மறைந்தது போற்றி கொண்ட துணையுடன் கோலம் காட்டியே ஞாலம் காத்தவன் போற்றி  போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம் ஆதி சிவனே போற்றி  போற்றி போற்றி ஓம் எம்மை காத்து நின்ற காவலன் புகழ் போற்றி

தந்த கணபதி

 தடை யெதும் இல்லா வாழ்வினை தந்தாய் தந்த கணபதி எங்கும் நின்றாய் கடைமடை கண்ட காவிரி போலே காத்தாய் எமையே கண் இமை போலே வண்ண பூக்களால் மாலைகள் செய்தே மயிலோன் அண்ணன் தோளில் சாத்தி மனங் கொண்ட மல்லிகை சரத்தினை சூட்டி மகிழ்ந்தோம் மடி தனில் பட்டாடை போர்த்தி  எரியும் தீப ஒளியாய் வாழ்வை ஏற்றி வைத்த உன் பாதம் பணிந்து என்றும் வாழ்வோம் உன்னை நினைத்து  எங்கள் கணபதி உன்னை துதித்து

தியாகராஜரின் ராமன்

கண்டேன் உன்னையே கண் முன்னே ராமா  கண்டேன் உன்னையே கண்முன்னே ராமா கருநீல வண்ணா ரவி குல மன்னா  கண்டேன் உன்னையே கண்முன்னே ராமா கருணையின் வடிவே காட்சி தந்தாயே  கண்முன்னே குடும்பமாய்   கருமேக மழையாய்  காவலன் நீயே காட்சி தந்தாயே  கண்களில் ஈரம் காவிரியானது  கண்டு துடைத்திட கங்கையே வந்தது என்ன நான் சொல்வது? எப்படி சொல்வது ? நான் பெற்ற பயனிது !யார் கொண்டு தந்தது? என் இசை இசைப் பாடலில்  என்ன நீ கண்டது ? ஏழையின் கண்முன்னே நீ வந்து நின்றது! ராமா! ராமா! என்ற நாமமே தந்தது ராமா உன் கருணையில் ராகங்கள் கரைந்தது ஏழையின் குடிசையில் இறங்கிய பாதமே!  என் உயிர் கீதங்கள் போற்றிடும் ராகமே! ராமா! ராமா! என்றும் உன் நாமமே  இனித்திட வேண்டும்  அது மட்டும் போதுமே தியாகய்யன் எனக்கு அது மட்டும் போதுமே

லஷ்மி நாராயணன்

 கண்கள் செய்த பயன் இன்று இதுவோ காட்சியாய் உனை கண்ட பலன் இதுவோ பெரிய திருவடி மேனியில் அமர்ந்து  பெரிதினும் பெரியதாய் நம்பிக்கை தந்திடும்  லஷ்மி நாராயணன் அருள் இதுவோ முரன் என்னும் அசுரன் முற்றிலும் அழிந்திட  மூட்டிய தீயாய் சக்தியை காட்டிடும்  ஏகாதசி தரும் ஆற்றலும் இதுவோ ஏகாதசி அன்று விரதம் இருந்து  ஏற்றம் தந்திடும் இறைவனை நினைத்து  வாழ்ந்திடும் வலிமையின் நாளும் இதுவோ சக்தியின் வடிவாய் தாயவள் அருகில்  சங்கு சக்கர தாரி உன் மடியில்  கண்டது கண்களின் பயன் இன்று இதுவோ

ஜெய ஜெய சங்கர

 காவி வண்ணம் மேனியில் ஒளிரும் கருணை வெள்ளம் கண்களில் வழியும் காத்திடும் தண்டம் தோளது தாங்கிடும் கையில் கமண்டலம் பாபங்கள் போக்கிடும்  நெற்றியில் நிலைத்த நீறதின் தோற்றம்  நெஞ்சில் மாலையாய் ருத்ரனின் மாற்றம் கண்டிட கண்கள் தவமது செய்திட கண்டேன் குருவின் பாதம் பணிந்திட சங்கர சங்கர சங்கர சங்கர சங்கர சங்கர ஜெய ஜெய சங்கர

அன்னையும் பிதாவும்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற  ஔவையின் சொல்லில் வாழ்பவர் யார் அன்னை பார்வதி ஈசனை தவிர  சொல்லில் வாழ்வது வேறிங்கு யார் அன்புடன் தாயின் மடியில் அமர்ந்து  வாழும் உலகை ஆள்பவன் யார்  யானை முகத்தால் அகிலத்தை காத்திடும் அற்புத நாயகன் விநாயகன் பார் ஏந்திய வேலுடன் மயில் மீதேறி  உலகம் சுற்றிய மைந்தன் யார் உண்மையில் உலகம் எதுவென காட்ட பழநியில் நின்ற முருகன் பார் தாய்க்கு தலையை தந்த விநாயகன்  தந்தைக்கு மந்திரம் சொன்ன அழகன் தந்தது என்ன எண்ணியே பார் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஔவையின் சொல்லில்   வாழ்ந்திடப் பார்

பழம் நீ முருகா

 பழம் நீ என்றே பாடி வந்தோம் உன்னை  பழநி மலை தேடி பசி துயர் எல்லாம் மறந்தே வந்தோம்  பாலன் உனை நாடி பாலகன் முருகனே பார்வதி மகனே பழநி வாழ் முருகா தாயவள் தந்த வேலுடன் நின்ற வேலவன் நீ முருகா ஊரது கூடி பேரது பாடி காவடி ஆடிடுமே வேல் கொண்ட நாளிதை தேர் கொண்டு ஆடி ஊர் நின்று பாடிடுமே தனியாய் வந்தாய் தாயுடன் நின்றாய் தைப் பூச நாளிதிலே  வாங்கிய வேலால் நீங்கிடும் தீமைகள் காத்தாய் நீ எமையே முருகா முருகா முருகா முருகா காத்தாய் நீ எமையே

அன்புடன் தம்பி

வந்தான் எங்கள் அன்புத் தம்பி  வாழ்த்துக்கள் சொல்வேனே கண்கள் திறந்து மூடி திறந்து  கண்மணி சிரிப்பானே எங்கள் தம்பி சிரிப்பானே சின்னவன் அவனே எழுந்து நடக்கையில் தாங்கி பிடிப்பேனே  கையை பிடித்து கால்கள் நடக்கையில் துணையாய் நடப்பேனே  என்றும் துணையாய் இருப்பேனே எங்கள் தம்பி என்னுடன் ஆடி சிரித்து வளர்வானே எந்தன் தோளானாய் இருப்பானே எல்லாம் தெரிந்து என்னுடன் வளர்ந்து  இமயம் தொடுவானே எங்கள் தம்பி இமயம் வெல்வானே

குரு ராகவேந்திர

 புல்லாங் குழலால் மயக்கும் ஒருவன்;  புன்னகை அம்பால் வீழ்த்தும் ஒருவன்; சிங்க முகந்தினில் சீறும் ஒருவன்; சேர்ந்தே அருளும் ஞானத் தலைவன்! குரு ராகவேந்திர என்னும் ஒருவன்! கண்ணின் கீதையை கவிதையாய் தந்தான்; மூல ராமனை நெஞ்சில் வைத்தான்; சிங்கமுகனின் பக்தனின் இருப்பிடம்' சேர்ந்தே அமர்ந்தான்; மந்தி ராலய மண்ணில் வாழ்ந்தான் துங்கபத்திரை ஆற்றின் கரையில்; துன்பம் தீர்க்கவே தன்னைத் தந்தான்! அருள்வாய் குருவே! அன்பின் வடிவே! யாரிங்கு உள்ளார்? எமக்கே இங்கே? குருவே சரணம்! குருவே சரணம்! கூடும் உறவுடன் உன்னிடம் சரணம் !

ஊழியில் ஆழி சிவனே

ஊழியில் ஆழி எழுந்திடவே  பெரும் ஊனும் உயிரும் மறைந்திடவே பொங்கி எழுந்த பிரளயத்திலே  போயின போயின போயினவே எல்லாம் போயின போயின போயினவே போயின வெல்லாம் மீண்டிடவே  ஊனும் உயிரும் வாழ்ந்திடவே  புறப்பட்டு வந்தாள் தாய் அவளே பூமியை காத்திட கண் விழித்தே பொழுது சாயும் நேரத்திலே  பொங்கிடும் கருணை  பெண்ணவளே  வேண்டி நின்றாள் சிவன் முன்னே  வேலவன் தந்தை அவன் முன்னே  நான்கு சாமமும் கண்விழித்தே  நாயகன் சிவன் அவன் தன் முன்னே வேண்டி நின்றாள்  தாயவளே  விண்ணவன் மன்னவன் அருளிடவே புலியின் ஆடையில் பாம்புடனே  உடுக்கை ஒலித்திட சங்குடனே மண்டையோட்டின் மாலையுடன்  மன்னவன் சிவன் அவன் பிறையுடனே  காட்சி தந்தான் கண்முன்னே  மீட்சி தந்தான் மண்ணிதற்கே சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவனே சிவ சிவ சிவ சிவ சிவ சிவனே மீட்சி தந்தான் சிவன் அவனே சிவ சிவ சிவ சிவ சிவன் அவனே ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய!

பிள்ளையார் என்பது பேரு

வெள்ளை நிலவின் பிறையாய் அழகாய்  பேறு கொண்டவன் யாரு பிரிய முள்ளவன் பிடித்து வைத்தவன் பிள்ளையார் என்றே பேரு காலங் காலமாய் காவல் தெய்வமாய்  காக்கும் கடவுள் யாரு  அரச மரத்திடை ஆளும் வேம்புடன்  ஆட்சி செய்பவன் பேரு பெற்ற தாயவள் உற்ற பிள்ளையாய்  உலகை யாள்பவன் யாரு ஊரும் பேருமாய் உயிர்கள் வாழ்ந்திட  உற்ற துணை யவன் பாரு பிள்ளையார் என்றே பேரு  பிள்ளையார் என்றே பேரு

ஏழுமலையான் தலைவா நீ

வாழும் காலம் பயனாகும்  வாழ்த்தியருள நீ வேண்டும் கூடும் செல்வம் நலம் யாவும்  உன் கருணை மழையின் நனவாகும்  மாலன் கோலம் தினம் கண்டு  மகிழ்ந்து வாழ வரம் வேண்டும்  ஏழுமலையதின் தலைவா நீ  என்றும் துணையாய் வரவேண்டும்  என்றும் துணையாய் வரவேண்டும்

காதலாகி எம் ஈசா

 காதலாகி கசிந்து கண்ணிமை மூடி  கரம் பிடித்து;   கனவுகள் தாங்கி; கண் கொள்ளா காட்சியாய் ! கண்முன்னே நின்றாய் நீ எம் ஈசா! அம்மையுடன்! உம் கண்காட்டும் கருணையினால் எம் மக்கள்  கங்கையாய் காவிரியாய் வற்றாத வளம் காட்டும் புன்னகையாய்   ஒன்றாகி வாழ்வதற்கு அருள்வாய் நீ எம் ஈசா! இந்நாளில் கண்விழித்தே!

அழகா முருகா

அருள்வாய் முருகா; அழகா முருகா;  அன்புடன் நீயே; வடிவேல் முருகா! ஈசன் தந்த இறைவா முருகா!   இமயவன் தளபதி எங்கள் முருகா ! கலங்கா உள்ளம் கருணை வெள்ளம் ; எவர்க்கும் உதவும் ஈகையின் நற்குணம்! அருள்வாய் அழகா ; ஈசன் புதல்வா ! அழகா முருகா;  உலகின் முதல்வா! கண்கள் காட்டும் கருணையின் ஆழம்; கையில் வேலது ;காத்திடும் வீரம்; இதயம் பேசும்  இறைவா முருகா!  காப்பாய் எமையே கண்களின் இமையே!

வையம் காத்திடும் வைத்தீஸ்வரன்

 உப்பும் மிளகும் உன் அருள் நீரில் ஒன்றாய் கரைத்து; எம் நலம் வேண்டி பாடி நின்றோம் கண் மலர் திறந்து காத்திடும் தையல் நாயகி; முன் கரம் ஏந்தி நின்றோம் வையம் வாழ்ந்திட வாழ்வது செழித்திட; வைத்திய நாதன் அருள் வேண்டி நின்றோம் வான் தரும் மழைபோல்; மண் தரும் பயிர் போல்; மங்கையின் துணையுடன் காப்பவனே! வளம் கொண்ட நிலமது' வளர்த்திடும் பயிராய்; வாழ்வதை காத்திடும் வைத்தியனே! வாழ்ந்திடும் நாளில் ' வாடா முகத்துடன் வந்துனை பாடுவோம் வைத்தியனே! வைத்தியனே எங்கள் வைத்தீஸ்வரனே!

நீல வண்ணனே ராமா

நீலமேக வண்ணத்திலே;  நெஞ்சில் இனித்திடும் ராகத்திலே; நிலவின் குளிராய் இதயத்திலே ; நீ இறங்கி வந்தாய் எம் நிலத்தினிலே! வானத்தில் புதிதாய் ஒரு தோற்றம் ; வண்ணப் பூக்களின் ஜதியாட்டம் ; வாரி அணைத்திட ஒரு கூட்டம் ; வந்தாய் நீயும் புன லாட்டம்! வில்லை ஏந்திடும் கரங்களிலே ; சொல்லை ஏந்திடும் இதயத்திலே; அன்புடன் கரையும் பாசத்திலே; அண்ணல் ராமனே நாமத்திலே ! காத்தாய் முனிவரை ஒரு காலம்; காதல் வாழ்வில் ஒரு ஜாலம்; கானகம் சென்றாய் சில காலம்; கற்றோம் உன்னிடம் பல காலம் ! இல்லறம் காட்டிய நல்லறமே ; இதயம் தேடும் உன் அறமே; அனுமனை அணைத்திட்ட அருட் கரமே; அகிலம் காத்திடும் உன் வரமே! ராம ராம ராம ராம ராம ராம ராம்! ராம சீதா ராம சீதா ராம சீதா  ராம்!

வாழ்க என் துணைவியே

 ஆடி வரும் காவிரியில் ஓடிவரும் தண்ணிரு; வாடும் வயல் நிறைச்சு நிக்கும் ; வளரும் பயிர் பாத்து நிக்கும்! தேடி வந்த எம் வீடு வாழ வந்து நீர் பாச்சி; பாத்து நின்ன திருமகளே ! எங்கள் வீட்டு குலமகளே! வாழ்ந்திருப்ப நலமுடனே! நாளெல்லாம் எம்முடனே! எம் வீட்டு தோட்டத்துல எத்தனையோ விதை முளைக்க;  நீர் ஊத்தி பாத்திருந்த நிலம் போல காத்திருந்த; ஓடி ஓடி வளர்த்த தெல்லாம் உசரத்துல நிக்குதம்மா!  நீ உழைச்சு வளர்த்த  மரம்; நிறையவே காய்க்குதம்மா! அறுபது வருஷமாச்சு ஆறுதல் நீயுமாச்சு! ஆனாலும் காய வில்லை  உன் வியர்வை ஈரம்மா! வாசலிலே போட்ட கோலம் வாழ்ந்திருக்க வேண்டும்மா; வந்த நீ மகராசி வாழ்ந்திருக்கும் காவலம்மா! வாய் நிறைய நீ சிரிக்க பாத்திருப்போம் நாங்களம்மா! வாழ்க நீ எந்நாளும் வாங்கலம்மன் துணையம்மா!

ராம் அனுமன்

 ராமா ராமா ராமா என்றே நாளும் பாடிடுவான் நம்பிக்கை தந்திடும் ராம நாமத்தை நாளும் பாடிடுவான் அனுமன் நாளும் பாடிடுவான் இதயத்தின் உள்ளே வாசம் செய்திடும் இறைவனை பாடிடுவான்  இன்னல் தீர்த்திடும் ராம நாமத்தை பாடியே வாழ்ந்திடுவான் பாடியே வாழ்ந்திடுவான் அனுமன்  ஆடியே வாழ்ந்திடுவான் பண்பின் சிகரமாய் வாழ்ந்தவன் ராமன் நாமத்தை பாடிடுவான் தாயவள் சீதை தந்த மோதிரம் தாங்கியே வந்திடுவான் தாளத் துயருடன் அன்னையின் நிலையை அனுமன் கூறிடுவான் ஆற்றலின் வடிவமாய் அன்னையை மீட்க அரும்பணி ஆற்றிடுவான் அண்ணல் ராமன் இதயத்தின் ஈரத்தில் என்றும் வாழ்ந்திருப்பான் அனுமன் என்றும் வாழ்ந்திருப்பான் ராம ராம ராம ராம ராம ராம ராமா ராம சீதா ராம சீதா ராம சீதா ராமா

வாழ்த்துக்கள் சகோதரனே

 வாழ்த்துக்கள் சகோதரனே! வற்றாத காவிரியின் ஈர மண்ணே! வாழைத் தோட்டத்து வளமான பாச நிழலே! வாழ்வில் பள்ளங்களை  வசதியான மேடாக மாற்றம் செய்த  பெரும் உழைப்பே! உட்கார நேர மில்லா உற்சாக சிறு நடையே! உயரத்தில் மட்டுமின்றி  உள்ளத்தால் உயர்ந்தவனே! உயிர் தந்த தாயவளும்;  உடன் வந்த  துணையாளும்; உளம் மகிழ குழந்தைகளும்; உற்சாக பேத்திகளும் பேரன்களும் ; உடன் பிறந்த தங்கைகளும்; உறவுகளும் ; கொண்டாடி மகிழ்ந்திடவே; வாழ்ந்திருப்பாய்! நலமாக! பல்லாண்டு! பல்லாண்டே!

அன்புடன் ராமு

கவிதை எழுதவில்லை  கண்ணீரைத் துடைக்க உன் கரம் அருகில் இல்லாததால்  உன் கனவுகள் வென்று விட்டன  நலமாய் இருக்கிறோம்  பேரன் பேத்திகளுடன்  உன் ஆசிகளுடன் உடன் அம்மாவுடன்.    அன்புடன் ராமு சுரேஷ் சாரு கீதா

பெரிய திருவடி

 விண்ணில் இருந்து மண்ணை யளக்கும் கண்கள் கொண்டவனே! கையில் சக்கரம் கொண்டவன் மாலவன் மனதில் நின்றவனே ! தாயின் பெருமை நிலைத்திட பூமியில் தன்னைத் தந்தவனே ! தரணியை காப்பவன் மாதவன் தன்னை முதுகில் சுமப்பவனே காணும் கண்கள் கண்டதும் வணங்கும் கண்ணிய குலமகனே  கண்களின் கருணையே காத்திடும் நீதியே கருடனே தளபதியே பெறுவோம்  பெருமாள் அருளை உன்னால் பெரிய திருவடியே உன்னால் என்றும் பெறுவோம் அருளை பெரிய திருவடியே

காத்திடும் துர்கை

 இனி எமக்கில்லை அச்சம் அம்மா இனி எமக்கில்லை அச்சம் அம்மா கண்களின் ஒளியே  கனக துர்க்கையே கவலை எமக்கில்லை அம்மா ஒவ்வொரு கரமும் ஓர் துயர் நீக்கிடும்  ஒன்றாய் இணைந்தே ஓர் வழி காட்டிடும் அழகிய மாலை அற்புத புன்னகை அன்னை உன் அருளாய் அதிசயம் காட்டிடும்  கங்கை உன் வெள்ளம் கரை எம்மை சேர்த்திடும் காலங்கள் கடந்தே வாழ்ந்திட அருளிடும் கருணையே உயிரே கனக துர்க்கையே  கவலை எமக்கில்லை காத்திடும் தாயே

ஆதிசிவன் அற்புதமே

 அடடா! அடடா! அற்புதமே! ஆதிசிவன் மடி அற்புதமே! காதில் சொல்பவன் அற்புதமே ! கார்த்திகேயன் அவன் அற்புதமே! வாரி அனைத்திடும் வானவன் கரங்கள் ; பாசம் காட்டிடும் பரமனின் கண்கள் ! மடியேறி அமர்ந்திடும் மழலை முருகன்; மந்திரம் சொல்லி தந்திடும் தலைவன் ! சொல்வதை அன்புடன் ஏற்றிடும் ஈசன்; சொல்லி தந்தவன் சுவாமி நாதன்! நல்லதை ஏற்க நாடகம் புரிந்தவன்; நமசிவாயனே நம்மை காப்பவன்! அற்புதம்! அற்புதம்! அற்புதமே ! ஆதிசிவன் என்றும் அதிசயமே!

வாழ்க எம் செல்லமே

 ஓடிவரும் காவிரியே உற்சாகப் புன்னகையே! கூடி வரும் மேக மெல்லாம் கொண்டாடும் தேன் மழையே ! ஆடி வரும்; பாடி வரும்; ஆனி மாசம் தேடி வரும் ; அற்புதமே; அதிசயமே; எங்க வீட்டு சொப்பனமே! கொஞ்சம் மொழி பேசி நிக்கும்; குறுகுறுன்னு பாத்து நிக்கும் ; கூட பிறந்த அண்ணன் கொண்டாட பார்த்திருக்கும் ! தாய் தகப்பன் மனசுபோல தங்கமா வாழ்ந்திருக்கும்; தன்னோட உறவெல்லாம் தாங்கி நிக்க நாள் இனிக்கும்! வானாட்டம் மண்ணாட்டம் வத்தாத ஆறாட்டம்; வாழ்ந்திருக்கும் காலமெல்லாம் வாசலிலே தேரோட்டம்! சாதிக்க வலுவிருக்கும் சாயாத மனசிருக்கும்; ஓடிவா எம் உசுரே; உலகமெல்லாம் காத்திருக்கும்! ஓடிவா எம் உசுரே; உலகமெல்லாம் காத்திருக்கும் !

வாழ்க மருமகளே

 கால் தடம் கொண்ட காவிரி ஆறு; கணவன் குழந்தைகள் நீ கொண்ட பேறு! சற்றே வானம் சாய்ந்தே வாழ்த்த; சந்தியில் நிலா அது புன்னகை பூக்க! வாழ்வாய் என்றும் வளம் தரும் நிலமாய்; வற்றா ஊற்றாய் உளம் பொங்கும் அன்பாய்; வாழ்ந்திடும் இல்லத்தின் வான் தந்த மழையாய்; வாழ்வாய் சிறப்பாய்; வாழ்வதில் நிறைவாய்! வாழ்க! நலமுடன்! வாங்கல் அம்மன் அருளால்.  Happy birthday Anitha

மாலை கொண்டவன் மாதவன் என்பவன்

 மாலை கொண்ட தோள்களை கண்டேன்  மாலவன் மாதவன் அடிமையாய் நின்றேன் வண்ண அழகு பட்டாடை பார்ப்பவர்  கண்களில் சிற்றோடை  உருகும் இதயம் தன்னாலே உன்னை கண்டது பொன்னாலே  நெற்றியின் திருமண் கண்டாலே நினைவுகள் நிலைத்திடும் உன் மேலே மலையப்ப சுவாமி என்றாலே  மலைபோல் செல்வம் முன்னாலே காரிருள் வண்ணனை கண்டாலே கவலைகள் மறையும் தன்னாலே

ஆரம்பம் கணபதி

 ஆரம்பம் ஆரம்பம் உன்னாலே ; ஆனந்தம் ஆனந்தம் தன்னாலே ! தடைகள் நீங்கி மடை போல் வெள்ளம் பாய்ந்திடும் நிலமதில் உன்னாலே; பாய்ந்திடும் நீரதில் வாழ்ந்திடும் பயிர்கள் வாழ்வினை தந்திடும் தன்னாலே ! அன்னையின் கரங்கள் ஆயிரம் பொன்கள் அள்ளியே தந்திடும் உன்னாலே ; ஆயிரம் தாமரை மலர்களின் மேலே அன்னையின் வாசம்  முன்னாலே ! ஏந்திடும் கைகள் இனிப்புகள் தந்து வாழ்ந்திடும் எம்மை தன்னாலே ; என்றுமே என்றுமே எங்கள் வாழ்வதில் வாழ்ந்திடும் தெய்வம் நீ தானே ! நீதானே என்றும் நீதானே எங்கள் லட்சுமி கணபதி நீதானே

ஆண்டாள் என்றே

 அழகு தாமரை; அற்புத மல்லிகை;  இதயத்தை வெல்லும் ஈடில்லா ரோஜா;  தங்க அணிகளன்; தாங்கிடும் புன்னகை; எடுப்பாய் கொண்டை;  எல்லாம் எல்லாம் இனிதே கொண்டாய் ! அதனினும் இனிதாய்! தந்தாய் எமக்கே!  தன்னிகரில்லா தலைவன் புகழை! தமிழாய் உருகி அழகாய் நீயே  ஆண்டாள் என்றே அற்புத பெயருடன்! தாயே தமிழே தருவாய் தமிழே! மாதவன் சூடிய மாலையின் உயிரே!

ஆயினும் காவேரி

 தேடிவரும்; ஓடிவரும்;  தெம்மாங்கு பாடி வரும்; ஆடியிலே பெருக்கெடுத்து  காவேரி ஓடிவரும் ! கூடிவரும் சொந்தமெல்லாம்  நாடி வரும் உன் கரைக்கே; கொண்டாடி குளித்திருக்க!  குறையின்றி வாழ்ந்திருக்க! நாயகியே! காவேரி!  நாளெல்லாம் காக்க வேணும் ! நாடெல்லாம் நலமாக; நல்ல விதை தான் முளைக்க; நீரால சீராட்டி நீ யென்றும்  காக்க வேணும் ; தாயே எம் காவேரி ; வாழ வைக்க வேண்டும் அம்மா !

காரிருள் வண்ணன்

 கைத்தளம் கொண்டான் காரிருள் வண்ணன்; மெய்தளம் தந்தாள் தாமரை கரத்தாள் ; உய்தளம் வேண்டி உன் முன் நின்றவர் ; பொய்தளம் இல்லா வாழ்வதை பெறுவார் !